/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு சுவர்களில் விளம்பரம்: தடுக்காததால் அலங்கோலம்
/
அரசு சுவர்களில் விளம்பரம்: தடுக்காததால் அலங்கோலம்
ADDED : மே 11, 2025 11:50 PM

வால்பாறை; அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சுவர் விளம்பரம் செய்வதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், தி.மு.க.,வினர் கட்சி விளம்பரங்களை எழுதியுள்ளனர்.
குறிப்பாக, ஆழியாறிலிருந்து வால்பாறை நகர் வரும் வழியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள தடுப்புச்சுவர்களில் விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தியுள்ளனர்.
இதே போல், வால்பாறை நகரில் அ.தி.மு.க.,வினர் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பயணியர் நிழற்கூரைகளில் விதிமுறையை மீறி, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, அரசு சுவர்களில் விளம்பரம் செய்வதால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறைக்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. விதிமுறை மீறி சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களால், வாகன ஓட்டுநர்கள், கவனசிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில் அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள, விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தொகையை விளம்பரம் செய்துள்ள கட்சி நிர்வாகிகளிடமே வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.