/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தியாகராஜனுக்கு அதிக நிதி: அ.தி.மு.க., கோரிக்கை
/
தியாகராஜனுக்கு அதிக நிதி: அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : ஏப் 26, 2025 01:17 AM
சென்னை:சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கந்தசாமி: தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை இல்லாமல், எந்த துறையும் செயல்பட முடியாது. எனவே, இத்துறை அமைச்சருக்கு, தற்போது ஒதுக்கப்பட்டதை விட அதிக நிதியும், அதிக அதிகாரமும் வழங்க வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: இது, தேவையற்ற சர்ச்சையானதால் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தகவல் தொழில்நுட்ப துறைக்கு, 18 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட அளவு தான் நிதி ஒதுக்கப்படுகிறது.
நான் நிதி அமைச்சராக இருந்த போதும், அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சியிலும், இதே அளவு தான் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, இந்த டிசைன் தான் உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை முழுமையாக ஒரு துறையாக இல்லாமல், தொழில் துறையில் உள்ளது. இது, தி.மு.க., ஆட்சியில் வந்த பிரச்னை இல்லை. எந்த தனிப்பட்ட முடிவாலோ, எந்த தனிப்பட்ட அமைச்சருக்காகவோ இதை மாற்றவில்லை.
அ.தி.மு.க., செந்தில்குமார்: தமிழகத்தில் 2011 - -12 தி.மு.க., ஆட்சியில், மென்பொருள் ஏற்றுமதி 46,791 கோடி ரூபாயாக இருந்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 2019- - 20ல் மென்பொருள் ஏற்றுமதி மூன்று மடங்கு, அதாவது 1 லட்சத்து 39,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால், 2019- - 20ல் 7.40 லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது.
அமைச்சர் தியாகராஜன்: தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில், 2021ல் 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதியானது. கடந்த 2023ல் தி.மு.க., ஆட்சியில் இரண்டு மடங்காக அதாவது 2.24 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்ந்தது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

