/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., போராட்டம்; 900 பேர் கைது
/
அ.தி.மு.க., போராட்டம்; 900 பேர் கைது
ADDED : டிச 31, 2024 05:58 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை அண்ணா பல்கலை பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், கந்தசாமி, நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவள்ளுவர் திடலில், அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டிசிங் தலைமையில், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்சி நிர்வாகிகள் வருவதற்கு முன்பே, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டதால், பதட்டம் நிலவியது. போராட்டத்துக்கு வந்த அ.தி.மு.க.,வினரை சூழ்ந்து நின்ற போலீசார், அப்படியே வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, தி.மு.க., அரசை கண்டித்தும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, போலீசார் அவர்களை கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம், 900 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.