முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுக்குப் பிறகு சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுக்குப் பிறகு சந்திப்பு
ADDED : டிச 15, 2025 05:19 AM

மேட்டுப்பாளையம்: --: அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து, ஆசிரியரிடம் ஆசி பெற்று, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1974---75ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தில் நடந்தது. அப்போது படித்தவர்களில் சிலர் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயியாகவும், வியாபாரிகளாகவும் தற்பொழுதும் உள்ளனர். வகுப்பில் மொத்தம், 45 பேர் படித்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 30 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் முரளிதரன் தலைமை வகித்தார். 1974--75ம் ஆண்டு அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் ரங்கசாமியை, சிறப்பு அழைப்பாளராக அழைத்து, முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள், வயதான ஆசிரியரிடம் ஆசி பெற்றனர். பின்பு பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். காஜாமைதீன், சிவராமன், கோவிந்தராஜ் உள்பட பல முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசினர். அண்ணாதுரை வரவேற்றார். விஜயராகவன் நன்றி கூறினார். இந்த சந்திப்பில், தற்போதைய அரசு மேல்நிலை பள்ளிக்கு, வாட்டர் பில்டர் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
