UPDATED : ஆக 16, 2026 09:14 PM
ADDED : ஆக 16, 2026 09:02 PM

கோவை: ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானம், கோயமுத்துார் திருப்பாவை சங்கம், சார்பில், ஆடி மாத ஆன்மிக சொற்பொழிவு ராமர்கோயிலில் நடந்தது.
ஆன்மிக சொற்பொழிவாளர் தென் திருப்பேரை அரவிந்தலோசனன் பேசியதாவது:
பனிரெண்டு ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் ஆண்டாள். ஸ்ரீ மந்நாராயணனை மணம்புரிந்து கொள்ளும் தனது விருப்பத்தை நாச்சியார் திருமொழியின் ஆறாம் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்ற பாடலில் சொல்கிறார்.
ஆயிரம் யானைகள் புடைசூழ தன் மணாளன் பட்டணப்பிரவேசத்தில் நடந்து வர, மாப்பிள்ளை அழைப்பின் போது, மணமகனை எதிர்கொண்டு பூரண பொற்குடத்துடன் வரவேற்க வேண்டும்.
அப்போது நகர் முழுக்க தோரணம் கட்ட, கனா காண்கிறார் ஆண்டாள். மணவிழா எப்படி இருக்க வேண்டும், எப்படியெல்லாம் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதை கனாக்கண்டேன் என, தோழியிடம் பத்துபாடல்களில் சொல்கிறார்.
இது ஆண்டாள் உறக்கத்தில் கண்ட கனவல்ல. எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கவேண்டும் என விரும்பிய அவரது எதிர்பார்ப்பை, கனவாக எடுத்துச் சொன்னார். ஆன்மிக ரீதியில் அவர் அரங்கநாதருடன் ஐக்கியமானதன் மூலம் அவரது கனவு நிஜமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
