/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
/
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 23, 2025 11:04 PM

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அருகே, காவிலிபாளையம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில், கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களை உள்ளடக்கி, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி ஊராட்சி காவிலிபாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கால்நடை உதவி இயக்குனர் சக்ளாபாபு தலைமை வகித்தார்.
கால்நடைகளில், நோய் பாதிப்பை கண்டறிதல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக பராமரிக்கப்படும் கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது. கால்நடை டாக்டர் குமார், உதவி டாக்டர் இந்துமதி, கால்நடை ஆய்வாளர் தமிழன்பன் உட்பட பலர் இதற்கான பணியை மேற்கொண்டனர்.

