/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாமலையார் குளம் சீரமைக்கும் பணி துவக்கம்
/
அண்ணாமலையார் குளம் சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 21, 2024 11:41 PM
அன்னுார் : 30 ஏக்கர் பரப்பளவு உள்ள அண்ணாமலையார் குளம் சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது அண்ணாமலையார் குளம். 30 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
இக்குளம் அத்திக்கடவு -- அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் குழாய் உடைப்பு காரணமாக, சோதனை ஓட்டம் துவங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டாக இந்த குளத்திற்கு அத்திக்கடவு நீர் வராமல் இருந்தது. கடந்த ஒரு வாரமாக இக்குளத்திற்கு அத்திக்கடவு நீர் வருகிறது.
கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பு கோவை மாவட்டத்தில், காளிங்கராயன் குளம், அக்ரஹார சாமக் குளம், சின்ன வேடம்பட்டி ஏரி உள்ளிட்ட 18 குளம், குட்டைகளை தூர்வாரி சீரமைத்து வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலையார் குளத்தை புனரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் குளம் தூர்வாரி சீரமைக்க பூமி பூஜை நடந்தது.
இதில் கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 100 குளங்களை சீரமைக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதி வாயிலாக இப்பணி நடைபெறுகிறது.
குளங்கள் தூர்வாரப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இப்பணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் புஷ்பவதி, துணைத்தலைவர் சரண்யா, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமண மூர்த்தி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர் சுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.

