/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
/
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
ADDED : மார் 27, 2025 11:40 PM

பொள்ளாச்சி தெப்பக்குளம் நகராட்சி துவக்கப்பள்ளி, ஆங்கிலேயர் காலத்தில், 1921ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்பின், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, எட்டாம் வகுப்பு வரை செயல்படுகிறது.
இந்த பள்ளியில் படித்த மாணவர்கள், பல்வேறு பதவிகளில் உள்ளனர். வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளியின் நுாற்றாண்டுவிழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
அதில், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழாவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருநல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் மற்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
* குடிமங்கலம் ஒன்றியம், ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் வரவேற்றார். ஆசிரியர் ரேணுகா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அருள்ஜோதி முன்னிலை வகித்தார். மாணவர்களின் பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சி நடந்தது. தொடர்ந்து பள்ளிக்கு கல்விசீர் திரட்டுதல் மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் ஆண்டு விழாவை பார்வையிட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் தர்மராஜ் கலாசார சீர்கேடு குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
-- நிருபர் குழு -