/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குடியிருப்புக்குள் சமூக விரோத செயல்கள்!
/
போலீஸ் குடியிருப்புக்குள் சமூக விரோத செயல்கள்!
ADDED : ஜன 29, 2024 12:38 AM

டெங்கு இங்கு இலவசம்
உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் காலனி, இரண்டாவது வீதியில் மழைநீர் வடிகாலில், கடந்த ஒரு மாதமாக மண், கற்கள் அடைத்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.
- சந்திரசேகர், உப்பிலிபாளையம்.
பலி வாங்க காத்திருக்கும் கம்பம்
கணபதி, சங்கனுார் ரோடு, 30வது வார்டில், 'எஸ்.பி -53, பி -6' என்ற எண் கொண்ட கம்பம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் துருப்பிடித்து, ஓட்டையாக உள்ளது.
- ஸ்ரீஹரி, கணபதி.
மூச்சை முட்டும் துர்நாற்றம்
புலியகுளம், போலீஸ் கந்தசாமி வீதியில், 64வது வார்டில் சாக்கடை சரிவர துார்வாருவதில்லை. குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. கடும் துர்நாற்றத்துடன், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
- சேகர், புலியகுளம்.
சறுக்கி விழும் வாகனஓட்டிகள்
மாநகராட்சி, 94வது வார்டு, மாச்சம்பாளையம் முதல் இடையர்பாளையம் வரை, சாலை சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. பைக்கில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர்.
- ராஜன், மாச்சம்பாளையம்.
பழைய கட்டடத்தில் 'பார்'
கோவைப்புதுாரில், பயன்பாட்டில் இல்லாத பழைய போலீஸ் குடியிருப்பு பகுதி கட்டடங்கள், இடிக்கப்படாமல் உள்ளன. கட்டடத்தை சுற்றிலும் முள்செடிகள், புதர் அடர்ந்து வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
- பாலாஜி, கோவைப்புதுார்.
தாறுமாறு பார்க்கிங்கால் இடையூறு
சுந்தராபுரம் சிக்னலில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் ரோடு மற்றும் பொள்ளாச்சி சாலையின், இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி, சிறிய விபத்துகளும் நடக்கின்றன.
- சிவராமன், மதுக்கரை.
இடிந்த சாக்கடை
பாப்பநாயக்கன்புதுார், மருதமலை ரோடு, 74வது வார்டு, சாஸ்திரி இரண்டாம் வீதியில், சாக்கடை சிலாப் உடைந்துள்ளது. இடிந்த பகுதியை சீரமைக்க, பலமுறை வலியுத்தியும் நடவடிக்கையில்லை. சாக்கடையை சுத்தம் செய்த பின்பும், கழிவுகளை சாலையிலே போட்டுள்ளனர்.
- குணசேகரன், பாப்பநாயக்கன்புதுார்.
மின்மாற்றியை சுற்றி புதர்காடு
கோவைப்புதுார், எட்டாவது வார்டு, மீனாட்சி நகரில், டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் அடர்த்தியான புதர் வளர்ந்துள்ளது. அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி, பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் படையெடுக்கின்றன. புதரை அகற்ற வேண்டும்.
- பிரபாகரன், கோவைப்புதுார்.
விளக்கை மாற்றமூணு மாசமா?
ஜி.என்.மில்ஸ், ஸ்ரீ சூர்யலெட்சுமி கார்டன்ஸ், 15வது வார்டில், 'எஸ்.பி -4, பி -5' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை. குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- சுப்பிரமணியன்,ஜி.என்.மில்ஸ்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி பின்புறம், அலமேலு மங்காபுரம், மூன்றாவது வீதியில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சாக்கடை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி அடைத்து நிற்கிறது. அடிக்கடி கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது.
- மெல்வின் ராஜ், கணபதி.
குழியால் தொடரும் விபத்து
பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் இருந்து வரும் வழியில், சாலையின் இருபுறமும், மழைநீர் ஓடி மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் ஓரத்தில், ஒரு அடி ஆழம் வரை குழிகள் உள்ளன. பைக்கில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். குழிகளை சரிசெய்ய வேண்டும்.
- சுந்தரம், பூண்டி.
தெருவிளக்குகள் பழுது
பெரியநாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சி, பி.எஸ்.சி., கார்டனில், புதிய தெருவிளக்குள் பொருத்தப்பட்ட ஒரே வாரத்தில், மூன்று விளக்குகள் பழுதாகி விட்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், பழுதான தெருவிளக்குகளை சரிசெய்யவில்லை.
- மோகன், பிளிச்சி
குப்பை சேகரிக்க வருவதில்லை
பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனியில், தினமும் வீடு, வீடாக குப்பை சேகரிப்பதில்லை. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்களுக்கு மட்டுமே குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருகின்றனர்.
- நாராயணமூர்த்தி, பேரூர் செட்டிபாளையம்.
மின்விபத்து அபாயம்
மேட்டுப்பாளையம், அன்னுார் ரோட்டில், குமாரபுரம், லட்சுமி பேலஸ் எதிரில், பெரிய மரத்தின் கிளைகள் மின்ஒயர்களில் உரசுகின்றன. வேகமாக காற்றடிக்கும் போது, அடிக்கடி மின்பழுது ஏற்படுகிறது. சாய்ந்த நிலையில் உள்ள மரத்தால், கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது.
- ராஜன், அன்னுார்.
உதைக்கும் குதிரைகள்
துடியலுார், சேரன்காலனி, விஸ்வநாதபுரம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் சாலையில் அங்கும், இங்கும் நடமாடுகின்றன. சாலையில் செல்லும் குழந்தைகளை, குதிரைகள் உதைத்து, மிதித்துள்ளது. இளைஞர் ஒருவரை கடித்துள்ளது.
- தங்கவேல், துடியலுார்.