/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் 'ஆர்ட் தெரபி' ; மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பயிற்சி
/
அரசு மருத்துவமனையில் 'ஆர்ட் தெரபி' ; மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பயிற்சி
அரசு மருத்துவமனையில் 'ஆர்ட் தெரபி' ; மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பயிற்சி
அரசு மருத்துவமனையில் 'ஆர்ட் தெரபி' ; மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பயிற்சி
ADDED : ஆக 04, 2025 08:08 PM

கோவை; கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட்டு வரும், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில், ஆர்ட் தெரபி நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, தினந்தோறும், ஓவியம் வரையவும், வண்ணம் தீட்டவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநில சுகாதாரத்துறை சார்பில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, 15 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவை உட்பட 25 மருத்துவமனைகளில், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் கடந்த பிப்., மாதம் துவக்கிவைக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஜூன் இறுதியில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. சாலையோரங்களில் மாதக்கணக்கில் தங்கியிருந்தவர்கள் கண்டறியப்பட்டு, சமூக ஆர்வலர்கள், போலீஸ் உதவியுடன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றனர். இரண்டு கேர் டேக்கர், நான்கு செவிலியர்கள் சுழற்சிமுறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்புடன் இணைந்து, செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மைய பொறுப்பாளர் ஷினாஷ் கூறுகையில், ''தற்போது ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும், அட்டவணைப்படி, காலை உணவு, மருந்து வழங்கல், பிசியோதெரபி, ஆர்ட் தெரபி என திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.
ஆர்ட் தெரபி சமயத்தில் ஓவியம் வரையவும், வண்ணம் தீட்டவும் பழக்கப்படுத்துகிறோம். இவர்களின் மனநலம் சற்று சரியான பின், அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.
மையம் எப்போதும் பாதுகாப்பு காரணங்களுக்காக பூட்டி வைக்கப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், 6374713767 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்,'' என்றார்.