/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு
/
வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு
ADDED : மார் 07, 2026 06:39 AM

கோவை: கோவை மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். 67 தீர்மானங்கள் நிறைவேறுவதாக மேயர் அறிவித்தார். அ.தி.மு.க.வினர் அதை ஆட்சேபித்தனர்.
பிரபாகரன் (வார்டு 47): கடந்த மாதம் அவசர கூட்டம் நடத்தினீர்கள். இந்த மாதமும் அவசர கூட்டம் நடத்துகிறீர்கள். 5 மாதம் முன்பு விடப்பட்ட டெண்டர்களுக்கு, இப்போது அனுமதி கேட்கிறீர்கள். ஏன் இந்த தாமதம்?
மேயர்: நீங்கள் ஒருத்தர்தான் எப்போதும் கேள்வி கேட்கிறீர்கள். மன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுறீங்க. ஒவ்வொரு வார்டிலும் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அதை தாங்க முடியாமல் எதிர்க்கிறீர்கள்.
மீனா (வா.46), கதிர்வேல் (வா.10): இவுங்களுக்கு ஏன் மேயர் பதில் சொல்கிறீர்கள். வெளிநடப்பு செய்யட்டும், விடுங்க.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் இருவரும், 'கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... மேயரை கண்டிக்கிறோம். அவசர கூட்டம் எதற்கு, தீர்மானங்கள் எதற்கு?' என கோஷமிட்ட படி வெளிநடப்பு செய்தனர்.
லக்குமி இளஞ்செல்வி (வா.52): பப்ளிசிடிக்காக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இப்படி செய்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த மன்றத்தில் பேச எதிர்க்கட்சியை அனுமதித்ததே இல்லை. இப்போது தாராளமாக பேச விடுகிறீர்கள். அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
ராமமூர்த்தி (வா.12): பிரபாகரன் நடத்தைக்கு மா.கம்யூ. கண்டனத்தை பதிவு செய்கிறேன். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர்வேல் (வா.10): ஆமாம், நடவடிக்கை எடுக்காவிட்டால், மன்றத்தின் மாண்பு குறைந்து விடும்.
முபஷீரா (வா.82): நான் வரி விதிப்பு குழு தலைவர். எந்த தீர்மானமும் என் குழுவுக்கு வரவில்லை. எங்களிடம் கையெழுத்து வாங்காமல், மன்றத்துக்கு எப்படி கொண்டு வந்துள்ளீர்கள்?
உதவி கமிஷனர் (வருவாய்) மகேஷ் கனகராஜ்: உங்களை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை.
முபஷீரா: போனை எடுக்காவிட்டால் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே. குழு அனுமதி இல்லாமல் மன்றத்துக்கு தீர்மானம் வரக்கூடாது. இனி இப்படி தவறு செய்யாதீர்கள்.

