/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அசத்தும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்
/
அசத்தும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்
ADDED : நவ 27, 2024 10:09 PM

கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் கோவை மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் 'வினாடி - வினா விருது, 2024-25' போட்டி நடத்தப்படுகிறது. அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் போட்டிகள் நடந்துவரும் நிலையில், கடந்த, 19ம் தேதி மாநகராட்சி பள்ளிகளில் போட்டி துவங்கியது.
கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமமும் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது. இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நேற்று முன்தினம், ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 84 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் நிறைவில், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி பிரியா, 9ம் வகுப்பு மாணவி சாருஹாசினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அருந்ததி பரிசுகள் வழங்கினார்.உதவி தலைமையாசிரியர்கள் சுமதி, தேன்மொழி, ஆசிரியர் ரேணுகாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், கோட்டைமேடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், 163 பேர் பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட வினாடி- வினா போட்டியில், 'இ' அணியை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர்கள் முகமது ரினாஸ், முகமது அல் முகாஜிர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தன் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் பிரேமா, கிறிஸ்டி அன்பு மலர், மங்கையர்க்கரசி, சாஹிதா பானு ஆகியோர் உடனிருந்தனர்.