/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் வேகம் பைக்குகளில் அட்ராசிட்டி
/
மலைப்பாதையில் வேகம் பைக்குகளில் அட்ராசிட்டி
ADDED : மே 11, 2025 11:49 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழித்தடத்தில், பைக்குகளில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால், விபத்து அபாயம் நிலவுகிறது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, வார விடுமுறை நாட்களில், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பைக்கில் வருகின்றனர்.
குறிப்பாக, 'லேட்டஸ்ட் மாடல்' பைக்கில் வலம் வரும் மாணவர்கள் சிலர், நெரிசல் மிகுந்த ரோட்டிலும் அதிவேகத்தில் செல்கின்றனர். மலைப்பாதையில் வாகனத்தை குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது போன்ற பல்வேறு சாகசங்களிலும் ஈடுபடுகின்றனர். இவர்களின் சேட்டைகளால், பிற வாகன ஓட்டுநர்கள் விழிபிதுங்கி ஒதுங்கி விடுகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: இளைஞர்கள் பைக்கை அதிவேகமாக இயக்குகின்றனர். சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' பதிவுக்காக சாகசங்கள் செய்து, வீடியோவும் எடுக்கின்றனர். இவர்களின் செயல், பிற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக மாறுகிறது.
மேலும், நெரிசல் மிகந்த ரோடுகளில், அதிவேகமாக பைக்கை இயக்குவதால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. பைக்கில் அதிவேகம் காட்டும் இளைஞர்களைக் கண்டறிந்து தடுக்க, போலீசாரின் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.