ADDED : மார் 15, 2024 12:43 AM
கோவை:கோவை, சொக்கம்புதுாரில், மறைந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,இளங்கோவின் மகன் மதன் கடந்த, 2015, செப்., 27 ல், தோட்டத்து வீட்டில் மதன் இருந்த போது, பொன்னையராஜபுரத்தை சேர்ந்த இளங்கோ,54, சொக்கம்புதுாரை சேர்ந்த ராமகிருஷ்ணன்,48, ஆகியோர் சந்திக்க சென்றனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும், மதனை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த மதன் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.
செல்வபுரம் போலீசார் விசாரித்து, இளங்கோ, ராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும், தலா மூன்றாண்டு சிறை, மொத்தம்,15,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

