/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்கும் தகவலை கொடுக்க வேண்டும்: பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் எச்சரிக்கை
/
கேட்கும் தகவலை கொடுக்க வேண்டும்: பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் எச்சரிக்கை
கேட்கும் தகவலை கொடுக்க வேண்டும்: பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் எச்சரிக்கை
கேட்கும் தகவலை கொடுக்க வேண்டும்: பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் எச்சரிக்கை
ADDED : பிப் 04, 2024 12:04 AM
கோவை;'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் தகவலை கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால், ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு, தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.
சூலுார் ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சியில், இருகூர் கிராமத்தில் ஓடை புறம்போக்கில், 50 சென்ட் ஆக்கிரமிப்பில் இருப்பதாக, 2013ம் ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, சின்னியம்பாயைத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 11 தகவல்கள் கேட்டு மனு செய்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகம் பதிலளிக்காததால், மேல்முறையீடு செய்திருக்கிறார்.
அதற்கும் தகவல் தராததால், இரண்டாம் முறையாகவும் மேல்முறையீடு செய்துள்ளார். ஆணையத்தில் முறையிட்ட போது, 30 நாட்களுக்குள் தகவல் வழங்கி விட்டு, ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
மனுதாரர் கேட்ட தகவல்களை கொடுக்காததோடு, ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காததால், இதுதொடர்பாக, சென்னையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
மனுதாரர் தரப்பில் செல்வராஜ், சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பிலும் விசாரணை நடத்திய பிறகு, மனுதாரர் கேட்ட தகவல்களை, 15 நாட்களுக்குள், கட்டணமின்றி, ஒப்புகைச்சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். அதை மனுதாரர் ஏற்றுக்கொண்ட ஏற்பளிப்பு செய்த ஒப்புகை அட்டை நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவல் நகலை இணைத்து ஓர் அறிக்கையாக, தகவல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
தவறும் பட்சத்தில், முன்னாள்/ இந்நாள் பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம், ஒழுங்கு நடவடிக்கை, மேல்முறையீடு இழப்பீடு வழங்குதல் போன்ற தண்டனை வழங்கப்படும் என, மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் எச்சரித்துள்ளார்.
மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்தால், 30 நாட்களுக்குள் முழுமையான தகவல் தர வேணடும்; கால தாமதத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.