ADDED : ஏப் 25, 2025 11:11 PM
அன்னுார்: அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தலைவர் பரமேஸ்வரனிடம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
அன்னுாரில், ஓதிமலை சாலையில், பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நுழையும் பாதையில், இடையூறு இல்லாமல் 10 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி இறக்கி வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு திடீரென ஆட்டோக்கள் அகற்றப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையிலும் அவற்றை நிறுத்த அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ் ஸ்டாண்டின் கிழக்குப் பகுதியில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல் அலுவலர் பதிலளிக்கையில், பஸ் ஸ்டாண்டுக்குள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க முடியாது. நெடுஞ்சாலையில் நிறுத்துவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீசாரிடம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
முன்னதாக அன்னுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் யமுனாவிடமும், 10 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆட்டோக்களை வழக்கமான இடத்தில் நிறுத்தி மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும், என மனு அளித்தனர்.

