/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தானியங்கி கதவு பொருத்தியும் பயனில்லை; பயணியர் அதிருப்தி
/
தானியங்கி கதவு பொருத்தியும் பயனில்லை; பயணியர் அதிருப்தி
தானியங்கி கதவு பொருத்தியும் பயனில்லை; பயணியர் அதிருப்தி
தானியங்கி கதவு பொருத்தியும் பயனில்லை; பயணியர் அதிருப்தி
ADDED : பிப் 19, 2025 09:35 PM
பொள்ளாச்சி; அரசு புறநகர் மற்றும் டவுன் பஸ்சில் புதிதாக பொருத்தப்படும் தானியங்கி கதவுகள், சரிவர செயல்படுத்துவதில்லை, என, புகார் எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் உள்ள அரசு புறநகர் மற்றும் டவுன் பஸ்களில், படியில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்க, தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதன்படி, ஸ்டாப் இருந்தால் மட்டுமே அங்கு பஸ் கதவு திறக்க, டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, கண்டக்டர் ஒவ்வொருவரும் ஸ்டாப் வருவதை குரல் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்து பயணியரை இறக்க தயார்படுத்த வேண்டும்.
ஆனால், பொள்ளாச்சி நகரில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் சில டவுன் பஸ்களில், புதிதாக பொருத்தப்பட்ட தானியங்கி கதவு, சரிவர செயல்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதேபோல, சில டிரைவர்கள், தானியங்கி கதவை மூடவும், திறக்கவும் ஆர்வம் காட்டாமல் வழக்கம்போல, பஸ்சை இயக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணியர் கூறியதாவது: மக்களின் பாதுகாப்பு கருதி, அரசு பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்படுகிறது. சில நேரங்களில் அந்த கதவு சரிவர திறக்காதபோது, அவசரமாக இறங்க முற்படும் பயணியர் பரிதவிக்கின்றனர்.
தானியங்கி கதவு இயக்கம் முறையாக உள்ளதா என்பதை தினமும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதேபோல, சில டிரைவர்கள், தானியங்கி கதவு பயன்பாட்டை பொருட்படுத்துவதும் கிடையாது.
வழக்கம்போல, கதவை திறந்த நிலையில் வைத்தவாறு இயக்குகின்றனர். துறை ரீதியான அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, படிக்கட்டு அருகே நிற்போர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவே, தானியங்கி கதவு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.