ADDED : ஏப் 07, 2026 11:28 PM

அன்னூர்: முதல் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அன்னூரில் நடந்தது.
வருகிற, 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்வேறு பிரிவினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று பொன்னே கவுண்டன் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் பங்கேற்றோர் அனைவரும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர். தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவ, மாணவியர் பேரணியாக சென்றனர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வாக்களிப்பதன் அவசியமும், வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மாணவ, மாணவியர், பொதுமக்களிடம், அனைவரும் வாக்களியுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் எஸ்.என்.எஸ். கல்லூரி பேராசிரியர்கள், தெற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
