ADDED : மார் 13, 2024 10:39 PM
உடுமலை, - உடுமலையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து, பள்ளி மாணவர்களுக்கான திறனறிப்போட்டி, வரும் 16ம்தேதி நடக்கிறது.
உடுமலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், 'குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு' என்ற தலைப்பில், உடுமலை லயன்ஸ் திருமண மண்டபத்தில், பள்ளி மாணவர்களுக்கு திறனறிப்போட்டிகள் நடக்கிறது.
போட்டிகள் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் இணையவழி வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்புச்சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில், 20 வினாக்கள் கேட்கப்படுகிறது.
சரியாகவும், விரைந்தும் பதில் அளிக்கும் மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்படுகிறது.
அடுத்து, வளரும் இளம் பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளும், தீர்விற்கான ஆலோசனைகளும் என்ற தலைப்பில், குழு கலந்துரையாடல் போட்டியும் நடக்கிறது. இதில் ஒரு குழுவுக்கு, மூன்று மாணவர்கள் பங்கேற்கலாம்.
வெற்றிபெறும் குழுவுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது. கூடுதலாக ஓவியப்போட்டிகளும், மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடக்கிறது.
போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒருங்கிணைப்பாளர்கள், 87782 01926, 99656 44666 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
