UPDATED : மே 17, 2026 11:15 PM
ADDED : மே 17, 2026 07:30 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட நிறுவனங்களில், வெளிமாநில தொழிலாளர்கள், தங்களுக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளக்கூடாது என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தன் முண்டா, 39, அன்னூரில் உள்ள தனியார் காஸ்டிங் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 4ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 7ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் 9ம் தேதி பிரேத பரிசோதனை அறிக்கையில், வெளிக்காயம் எதுவும் இல்லை, ஆனால் உள் காயம் இருக்கிறது, இடது பக்க விலா எலும்பு முறிந்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் காஸ்டிங் கம்பெனியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, கடந்த 3ம் தேதி இரவு பீகாரை சேர்ந்த சுராஜ்குமார், 26, விக்கிக்குமார்,17, ஆகியோர் ஜித்தன் குண்டாவை தாக்கி தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் உட்கோட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள், தோட்டங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் வெளிமாநில தொழிலாளர்கள், பல நூறு பேர் பணியாற்றி வருகின்றனர்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக தற்போது, போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, வெளிமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று, அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து வருகிறோம். மேலும், அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளக்கூடாது, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றனர்.
---
