/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு பேரணி
/
தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 03, 2025 11:47 PM

பொள்ளாச்சி; உலக தண்ணீர் தினத்தையொட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் செல்வி தலைமை வகித்தார். தண்ணீரின் அவசியம், சிக்கனம் குறித்த வீடியோ, டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டு, மாணவ, மாணவியரிடம் விளக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் புன்னை, மகிழம், சித்திரை கனி, சோளம் உள்ளிட்ட நான்கு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தண்ணீர் சிக்கனம், பயன்பாடுகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆசிரியர் சத்தியா பேசியதாவது:
தண்ணீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது; மனிதர்கள், விலங்குகள், செடிகள் அனைத்துக்கும் தண்ணீர் மிகவும் முக்கியம். உலகில் உள்ள தண்ணீரில் பெரும்பாலானது உப்பு நீராகும். குடிக்கக்கூடிய நீர் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, தண்ணீரை பாதுகாக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தண்ணீரின் முக்கியத்துவத்தை நினைவுப்படுத்தி, அனைவரும் தண்ணீரை பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். குளிக்கும் போதும்; பாத்திரம் கழுவும் போதும் தேவையான அளவு நீரையே பயன்படுத்த வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். குளம், ஆறு, கிணறு போன்ற நீர்நிலைகள் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

