ADDED : மார் 30, 2025 10:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு நடனம் நடந்தது. உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
இதில், பாஸ்ட்புட் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், சிறுதானிய உணவுகள், பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் பயன், மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், உணவுப்பொருட்களை செய்தித்தாளில் சுற்றி விற்பனை செய்வது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை, மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், ''பொள்ளாச்சியில் பாரம்பரிய உணவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில், பஸ் ஸ்டாண்ட், ஆனைமலை உள்ளிட்ட, மாவட்டத்தில், 10 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
