/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தினர் ஊடுருவல்; காரமடையில் கண்காணிப்பு
/
வங்கதேசத்தினர் ஊடுருவல்; காரமடையில் கண்காணிப்பு
ADDED : ஜன 28, 2025 11:43 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகையில் வங்கதேசத்தினர் உள்ளனரா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல், போலி ஆவணங்கள் தயார் செய்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் வங்கதேசத்தினருக்கு எதிராக, உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசத்தினர் யாரவது சட்டவிரோதமாக வந்துள்ளனரா, அவர்கள் தொழில்நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிகின்றனரா, விடுதிகளில் தங்கியுள்ளனரா என போலீசார் சோதனை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வங்கதேசத்தினர் ஊடுருவல் இருப்பதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து தொழில்நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இங்கு வங்கசேதத்தினர் இல்லை. இருந்தாலும் தற்போது யாராவது புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளனரா, அவ்வாறு சேர்ந்தால் அவருடைய விவரம் மற்றும் தற்போது பணியில் உள்ள வெளி மாநிலத்தவர்களின் விவரங்களை போலீசாருக்கு வழங்க அதன் உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை கட்டாயம் தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், ''வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதனை தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தவும் உள்ளோம்,'' என்றனர். ----