ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை.. உயர்கிறது! . ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் திட்டம்
ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை.. உயர்கிறது! . ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் திட்டம்
UPDATED : மே 03, 2026 04:58 AM
ADDED : மே 02, 2026 08:14 PM

கோவை: வணிக காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால், ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை உயர்கிறது. கோவை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் இதை உறுதி செய்துள்ளனர். மேற்காசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக, மே 1ம் தேதி முதல் வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம், 19 கிலோ கொண்ட சமையல் வணிக காஸ் சிலிண்டர், 2,406 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இப்போது, 990.50 ரூபாய் அதிகரித்து, 3,237 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் உணவகம் நடத்துபவர்கள் தனியார் காஸ் நிறுவனங்களிடமும், கள்ளச்சந்தையிலும் இரட்டிப்பு விலை கொடுத்து வாங்கி காஸ் பயன்படுத்தி வருகின்றனர். சிறு ஓட்டல்கள், பேக்கரிகள் நடத்தியவர்கள் பலர் கடைகளை மூடி விட்டனர்.
பல ஓட்டல்களில் உணவு பண்டங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து விட்டனர். உணவு விலையில், 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர்.
தற்போது வணிக காஸ் சிலிண்டர் விலை 3,237 ரூபாயாக உயர்ந்து இருப்பதால் ஓட்டல்களில் உணவு ஐட்டங்களின் விலை, மேலும் உயர்த்தப்படவுள்ளதாக, கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராமசாமி கூறுகிறார்.
அவர் கூறியதாவது:
வணிக காஸ் சிலிண்டர் விலை, ஒரேயடியாக இவ்வளவு விலை உயரும் என்று எதிர் பார்க்கவில்லை. இரண்டு மாதங்களாக காஸ் சிலிண்டர் கிடைக்காமல் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
வெளியில் 6000 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கி வியாபாரம் செய்தவர்களும் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்த்து இருந்தநிலையில், இப்படி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டர் மட்டுமல்ல, பெட்ரோல் விலையும் உயரும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் டிரான்ஸ்போர்ட் கட்டணமும் உயரும். அப்போது உணவு பொருட்களின் விலையும் உயரும்.
அதனால் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் கலந்து பேசி, உணவு ஐட்டங்களின் விலையை உயர்த்துவதை குறித்து முடிவு எடுக்கவுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
