ADDED : செப் 01, 2026 07:32 PM
பெ.நா.பாளையம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாநகர, மகளிர் அணி செயலாளர் லோகேஸ்வரி கலெக்டரிடம் அளித்த மனுவில், துடியலூர் வார சந்தையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால், சந்தையில் போதிய அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாததால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கழிவறை, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வைத்து விற்பனை செய்யும் கடைகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் விவசாயிகளின் விற்பனை பணிகளுக்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமான முறையில் வார சந்தையை பராமரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
எனவே, துடியலூர் வார சந்தையில் போதிய சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சந்தையை முறையாக சுத்தம் செய்து, அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். தற்போது, விவசாயிகளுக்கும், கடைகளுக்கும் இடையூறாக உள்ள தற்காலிக கழிவறையை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். வார சந்தையை விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வசதியாக சுகாதார முறையில் மாற்றி அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
