ADDED : மார் 20, 2025 11:39 PM
மேட்டுப்பாளையம்: வெயிலின் தாக்கத்தால், பவானி ஆற்றில் குளிக்க பலரும் வருகின்றனர். ஆற்றின் ஆபத்தான பகுதியில் சிக்கி உயிரிழிக்கும் அபாயம் உள்ளதால், பவானி ஆற்றில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லிதுறை, சிறுமுகை, வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லுார் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் மின் உற்பத்திக்கு பிறகு பில்லுார் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இச்சமயங்களில் ஆபத்து பகுதிகளில் குளிப்பவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், ''பவானி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி ஆற்றில் குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் லைப் காட்ஸ் போலீஸ் பிரிவினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். மொத்தம் 19 இடங்கள் ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன,'' என்றனர்.--