UPDATED : ஆக 31, 2026 08:16 PM
ADDED : ஆக 31, 2026 08:11 PM
கோவை:சூலுார் அருகேயுள்ள மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ் வரதராஜ். குனியமுத்துாரிலுள்ள ஷோரூமில், 'விண்கல் 350 மாடல்' பைக் வாங்குவதற்கு முன்பதிவு செய்தார்.
விலை ரூ.2.56 லட்சத்தை 2025, ஜன. 18 ல் செலுத்தினார். 10 நாட்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று கூறினர். ஆனால் பைக்கை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கேட்ட போது, முறையான பதில் அளிக்காமல் காலம் கடத்தினர். பணத்தை திருப்பி தரக்கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்கவில்லை. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா விசாரித்தனர். ''பைக்கிற்காக பெற்ற தொகை, ரூ.2.56 லட்சத்தை எதிர்மனுதாரர் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, ரூ.10,000 வழங்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தனர்.
