எலும்பு புற்றுநோயால் பாதிப்பு; 'பிளாசம்' உதவி திட்டம் துவக்கம்
எலும்பு புற்றுநோயால் பாதிப்பு; 'பிளாசம்' உதவி திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 24, 2025 09:20 PM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் மெரிடியன் சார்பில், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 'பிளாசம்'என்ற திட்டம் நேற்று துவக்கப்பட்டது. துவக்கவிழா மருத்துவமனை அரங்கில் நடந்தது.
ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் குகன் கூறியதாவது:
'போன் சார்க்கோமா' என்பது எலும்பு திசுகளில் ஆரம்பிக்கும் ஒரு வகை புற்றுநோய். கடந்த காலங்களில் இப்பாதிப்பு ஏற்பட்டால் கால்களை அகற்றுவதே ஒரே தீர்வாக இருந்தது. இந்நோயால் பெரும்பாலும், 10 வயது முதல் 30 வயதுள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அறுவைசிகிச்சைக்கு பிறகு, உயிரை காப்பாற்றினாலும் கால்கள் அகற்றுவதால் அவர்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது. தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை அகற்றி 'லிம்ப் சால்வேஜ் சர்ஜரி' செய்யப்படுகிறது. பின்னர் அந்த இடத்தில் உலோகம் வைத்து மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்யப்படுகிறது.
இதற்கான சிகிச்சை செலவு அதிகம் என்பதால், பலர் பயன்பெற முடியாமல் போகிறது. இதுபோன்றவர்களுக்கு உதவும் வகையில், பிளாசம் திட்டம் துவக்கியுள்ளோம். இதன் வாயிலாக, சிகிச்சை மற்றும் மருந்து செலவுகள் முழுவதும் ஏற்கப்படுகிறது. தற்போது, 5 பேர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர். எண்ணிக்கை ஏதும் இன்றி தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
துவக்கவிழாவில், எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பார்கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
