/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்சய திருதியைக்கு முன்பதிவு 'டல்' நடுத்தர மக்களின் வாங்கும் திறன் சரிவு
/
அட்சய திருதியைக்கு முன்பதிவு 'டல்' நடுத்தர மக்களின் வாங்கும் திறன் சரிவு
அட்சய திருதியைக்கு முன்பதிவு 'டல்' நடுத்தர மக்களின் வாங்கும் திறன் சரிவு
அட்சய திருதியைக்கு முன்பதிவு 'டல்' நடுத்தர மக்களின் வாங்கும் திறன் சரிவு
ADDED : ஏப் 26, 2025 12:49 AM

கோவை; தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாகவே, புதிய உச்சங்களை தொட்டு வரும் சூழலில், நடுத்தர மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு, முன்னணி கடைகள் தவிர்த்து,பெரும்பாலான கடைகளில் முன்பதிவு குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினத்தில் அட்சய திருதியைகொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தங்கம், வெள்ளி போன்றவை வாங்கினால், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு வரும், 30ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, தங்கம் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஒரு கிராம் தங்கம், 9,005 ரூபாய்க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி., சேர்த்து ஒரு சவரன் 78,030 ரூபாய்க்கு விற்பனையானது.
2024 ஜன.,1ம் தேதி ஜி.எஸ்.டி., சேர்த்து 48,698 ரூபாய்க்கும், 2025 ஜன., 1ம் தேதி 58,916 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த அபரிமிதமான விலை உயர்வு, தங்கம் வாங்கும் நடுத்தர மக்களின் தங்கம் சேமிக்கும் கனவை முடக்கியுள்ளது.
கோவையில் நேற்று சில கடைகளுக்கு விசிட் செய்த போது, முன்னணி தங்க நகை கடைகளில் வழக்கம் போல் அட்சய திருதியைக்கு, மக்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், சிறு, நடுத்தர நகை கடைகளில், முன்பதிவு பெரிதாக இல்லை.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், '' கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை, 2.15 சதவீதம் அதிகரித்துள்ளது.
''தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, மக்களிடம் வாங்கும் திறனை குறைத்துள்ளது. அட்சய திருதியைக்கு, எதிர்பார்த்த புக்கிங் பெரிதாக இல்லை. சற்று வசதியான மக்கள், எப்போதும் வாங்குபவர்கள் வழக்கம் போல், முன்பதிவு செய்கின்றனர்,'' என்றார்.