/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிளை அஞ்சலகம் மூடல்; பொதுமக்கள் போராட்டம்
/
கிளை அஞ்சலகம் மூடல்; பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஜன 31, 2026 05:02 AM

பொள்ளாச்சி: 'வடுகபாளையம் கிளை அஞ்சலகம் மூடக்கூடாது,' என வடுகபாளையம் மக்கள், அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் கிளை அஞ்சலகம் செயல்படுகிறது. இங்கு, 2,500 - 3,000 அஞ்சலக கணக்குகள் உள்ளன.இந்நிலையில், அஞ்சலகம் மூடப்படுவதற்கான அறிவிப்பு, அஞ்சலகம் முன் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில், வடுகபாளையம் கிளை அஞ்சலகம், கடந்த, 28ம் தேதி முதல், மகாலிங்கபுரம் துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட உள்ளது. அனைத்து அஞ்சல் சேவைகளும், பொதுமக்கள் அருகில் பொள்ளாச்சி தலைமை அஞ்சலகம் மற்றும் மகாலிங்கபுரம் துணை அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் சாந்தி மற்றும் பொதுமக்கள், கிளை அஞ்சகலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வடுகபாளையத்தில் வங்கிகள் இல்லாத நிலையில், கிளை அஞ்சலகம் மட்டுமே அனைத்து தேவைகளுக்கும் உள்ளது. இங்கு ஆதார் அட்டை பயன்படுத்தி பணம் எடுத்தல், பள்ளி மாணவர்களுக்கு கணக்கு துவங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. மேலும், முதியோர்களுக்கு கணக்குகள் உள்ளன. இங்கு, டெபாசிட்டாக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.
வருவாய் அதிகம் உள்ள நிலையில், திடீரென கிளை அஞ்சலகம் மூடப்படுகிறது. காரணம் கேட்டால், நகர்புற கிளை அஞ்சலகம் மற்றும் போஸ்ட்மேன் இல்லாதது போன்ற காரணங்களால் துணை அஞ்சலகங்களுடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு இருந்து பொள்ளாச்சி செல்ல போதிய பஸ் வசதி இல்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.கிளை அஞ்சலகத்தை இங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

