/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
கார் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : அக் 16, 2025 11:11 PM
கோவை: கோவை, மசாக்காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்த சுரேந்தர், உப்பிலிபாளையம் எஸ்.ஜி.ஏ., கார்ஸ் என்ற நிறுவனத்தில் 2020, ஜன., 9 ல், 10 லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடா கார் வாங்கினார். கார் வாங்கும் போது சாலை வரி, 99,960 ரூபாய், பதிவு கட்டணம், 12,256 ரூபாய் தனியாக பெற்றனர்.
ஆனால், ஆர்.டி.ஓ., ஆபிசிலிருந்து, சுரேந்தர் வாங்கிய புதிய காருக்கான சாலை வரி செலுத்தாததால், கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக, எஸ்.எம்.எஸ்., வந்தது.
நேரில் சென்று விசாரித்த போது, ஆயுட்கால வரி மட்டும் செலுத்தி விட்டு, சாலை வரி, 61,580 ரூபாய் கட்டாமல் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து கார் விற்பனை செய்த நிறுவனத்திடம் கேட்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
பாதிக்கப்பட்ட சுரேந்தர், கறுப்பு பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி தருவதற்கு கார் விற்பனை நிறுவனத்துக்கு உத்தரவிட கோரியும், மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த கூடுதல் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் பெயரை கறுப்பு பட்டியலில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கை எதிர்மனுதாரர் எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவை இரண்டு மாதத்திற்குள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், பணியை முடித்து கொடுக்கும் வரை, நாள் ஒன்றும் 1,000 ரூபாய் மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளனர்.