/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானம் அளவீடு பணி; வேலி அமைக்க கோரிக்கை
/
மயானம் அளவீடு பணி; வேலி அமைக்க கோரிக்கை
ADDED : அக் 10, 2025 10:30 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் மயானம் அளவீடு பணி நடந்தது.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, மின்வாரிய அலுவலகம் அருகே அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பில் இருந்தது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சிலர் கடந்த, 2018 முதல், மயானம் பகுதியை அளவீடு செய்து தர வேண்டும் என, பல முறை மனு அளித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை, 23ம் தேதி கிணத்துக்கடவு வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து அளவீடு பணியை மேற்கொண்ட போது, மழை பெய்ததால் அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன் மயானம் பகுதியை பொதுமக்கள் முன்னிலையில் நில அளவையர்கள் மீண்டும் அளவீடு செய்தனர்.
மக்கள் கூறுகையில், 'கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மயானம் அளவீடு பணிகள் மீண்டும் துவங்கியது. இதில், மயானத்துடன் வண்டிப்பாதை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயானத்திற்கு உட்பட்ட பகுதியை முறையாக கம்பி வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைத்து, மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.