/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கு சிக்கல் பஸ் பாஸ் பெறுவதில் நடைமுறை மாற்றம்
/
புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கு சிக்கல் பஸ் பாஸ் பெறுவதில் நடைமுறை மாற்றம்
புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கு சிக்கல் பஸ் பாஸ் பெறுவதில் நடைமுறை மாற்றம்
புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கு சிக்கல் பஸ் பாஸ் பெறுவதில் நடைமுறை மாற்றம்
ADDED : ஜன 17, 2026 05:24 AM
- நமது நிருபர் -
: எழுத்தாளர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கும் நடைமுறை மாற்றத்தால், புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கு, பஸ் பாஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் விருது, ஊக்கப்பரிசு, ரொக்கம் உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மேலும், சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. பெரும்பாலான எழுத்தாளர்கள், புனைப்பெயரில் தான் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்டவற்றை எழுதுகின்றனர்.
அரசு மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் வழங்கப்படும் விருதுகளை கூட, புனைப்பெயரில் தான் பெறுகின்றனர். இவர்களுக்கும் மாநில அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்தாண்டு, இலவச பஸ் பாஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கூறியதாவது:
இதுவரை, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, எழுத்தாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது; இதனால் இயற்பெயர் மற்றும் புனைப்பெயர் வைத்து எழுதும் எழுத்தாளர்கள், பஸ் பாஸ் பெற்றனர்.
ஆண்டுக்கொரு முறை, பஸ் பாஸ் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இந்தாண்டு விண்ணப்பிக்கும் முறை, 'ஆன் லைன்' வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
எழுத்தாளர்களின் ஆதார் அட்டையில் உள்ள அவர்களின் இயற்பெயர், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதனடிப்படையில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இயற்பெயர் வேறாகவும், புனைப்பெயர் வேறாகவும் கொண்டுள்ள எழுத்தாளர்கள், 'ஆன் லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும் போது, அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இதனால், அவர்களால் பஸ் பாஸ் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இது, அவர்களுக்கு அதிர்ச்சியை, மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல், எழுத்தாளர்களுக்கான பிற சலுகைகள் மறுக்கப்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இயற்பெயர் மற்றும் புனைப்பெயர் கொண்ட, தகுதியுள்ள எழுத்தாளர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் பிற சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

