ADDED : மார் 27, 2025 12:23 AM
தீயில் கருகி தொழிலாளி பலி
உப்பிலிப்பாளையம், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 53; கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி வீட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டு, பீடியை பற்ற வைத்து தீக்குச்சியை வீசியுள்ளார். அது படுக்கையின் மீது விழுந்து தீப்பற்றியது.
இதில் தீ அவரின் உடல் முழுவதும் பரவியதில், பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் திருடியவருக்கு சிறை
குனியமுத்துார், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரபீக், 39; உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் தனது பைக்கில் வந்தார். வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ராமர் கோவில் அருகே நிறுத்தியிருந்த, இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும், வண்டி கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் அவர், மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது, அவரது பைக்கை ஒருவர் ஓட்டி வருவதை பார்த்தார். உடனே ரபிக் அந்த நபரை மடக்கி பிடித்து, உக்கடம் போலீசில் புகார் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் குனியமுத்துாரை சேர்ந்த அப்பாஸ், 47 என்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்றவர் கைது
வெரைட்டி ஹால் ரோடு போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மரக்கடை சந்திப்பில் நின்று கொண்டிருந்த ரிஸ்வான், 20 என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் பதிலில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் சோதனை செய்து பார்த்த போது, 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.