ADDED : ஏப் 23, 2025 11:13 PM
விபத்தில் சமையல்காரர் உயிரிழப்பு
பேரூர், முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 49; சமையல் வேலைக்கு சென்று வந்தார். திருமணமாகி, ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். 15ம் தேதி, கணவனும், மனைவியும், சமையல் வேலைக்கு சென்று விட்டு இரவு, வீடு திரும்பினர். அதன்பின், சுந்தரம், மது அருந்துவதற்காக, கீழ்ச்சித்திரைச்சாவடி, பேரூர் - வேடபட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், சுந்தரம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. சுந்தரத்திற்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தரத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று சுந்தரம் உயிரிழந்தார். தொண்டாமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
நகை, பணம் திருட்டு
ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர் பழனிசாமி, 75; மனைவி, மகளுடன் வடவள்ளி எஸ்.எம்., நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பழனிசாமியின் மனைவி மற்றும் மகள் இருவரும் பொருட்கள் வாங்க டவுன்ஹால் சென்றனர். வீட்டில் தனியாக இருந்த பழனிசாமியும் மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்திற்கு பின், அவர் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 28 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது. சம்பவம் குறித்து பழனிசாமி, வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த, 'சிசி டிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

