ADDED : மே 14, 2025 11:42 PM
துாக்கில் தொங்கிய முதியவர்
தெற்கு உக்கடம், புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி, 80; ஆஸ்துமா நோயால் அவதியடைந்து வந்தார். இதற்காக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்த முனுசாமி, இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றார். அவரின் குடும்பத்தினர் காப்பாற்றினர். நேற்று முன்தினம் வீட்டில் முனுசாமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவர் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகள் வெண்ணிலா அளித்த புகாரில், பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் முதியவர் பலி
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாலன், 80. தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து முதியவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், முதியவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாட்டரி விற்றவர் கைது
சாய்பாபா காலனி போலீசார், வேலாண்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒருவர் கையில் லாட்டரி டிக்கெட்களுடன் இருந்தார். அவரிடம் விசாரித்ததில், அவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 48 என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி டிக்கெட்கள் வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து, லாட்டரி டிக்கெட்கள், மொபைல், பணம் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிரபாகரனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்ட விரோத மது விற்பனை
பீளமேடு பகுதியில் உள்ள, ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம், சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடை அருகில் இருந்த காலி இடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த 48 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 9580 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராமசாமியை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.