ADDED : மே 17, 2025 01:20 AM
சாலை விபத்தில் ஒருவர் பலி
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 55. இவர் வெள்ளக்கிணறு பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பால்ராஜ் மீத மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பால்ராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கோவை அரசு மருத்தவனைமக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா வாலிபர்கள் கைது
ராமநாதபுரம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதி பொது கழிப்பிடம் அருகில் சென்றனர். அங்கு இரண்டு வாலிபர்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. போலீசார் 220 கிராம் கஞ்சா வைத்திருந்த புலியகுளத்தை சேர்ந்த இளங்கோவன், 24, அரவிந்த் குமார், 23 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
குட்கா விற்றவருக்கு சிறை
ஆர்.எஸ்.புரம் போலீசார் தடாகம் சாலையில் உள்ள, டாஸ்மாக் மதுக்கடை அருகில் செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. கடையில் வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, குட்க விற்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
செல்வபுரம் போலீசார் செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக, பதில் அளித்ததால் போலீசார் அவரின் பேக்கை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அப்துல் ரகுமான், 51 என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
படியில் இருந்து விழுந்து பலி
கே.சி.தோட்டம், செட்டி வீதியை சேர்ந்தவர் நாதுராம், 33. இவர் கடந்த 11ம் தேதி வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்நிலையில், நாதுராம் கடந்த 13ம் தேதி வீட்டில் குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் குளியல் அறையில் இருந்து வெளியே வராததால் அவரது அண்ணன் கோபாராம் சென்று பார்த்த போது, அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.