குட்கா விற்றவருக்கு சிறை
துடியலுார் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது, 11.70 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குட்கா பதுக்கிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கங்காயன், 44 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மினி பஸ் ஏறி ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார், 42. இவர் கோவை பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு கடையின் வாசலில், நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கினார். நள்ளிரவு 12:40 மணியளவில் அவ்வழியாக வந்த மினி பஸ் ஒன்று, சசிகுமார் மீது ஏறி சென்றது. இதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த கிழக்கு போக்குவரத்து போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டனர். மினி பஸ்சை ஓட்டி வந்த விஜயன் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மது விற்ற இருவருக்கு சிறை
நேற்று முன்தினம், சரவணம்பட்டி போலீசார் சங்கனுார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் காலை 8:00 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுந்தராபுரம், எல்.ஐ.சி., காலனி டாஸ்மாக் மதுக்கடை அருகில், சோதனை மேற்கொண்ட போது, சட்ட விரோத மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு இடங்களில் இருந்தும், 187 மது பாட்டில்கள், ரூ. 4970 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திருவாரூரை சேர்ந்த சரவணன், 30, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், 31 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 கிலோ கஞ்சா பதுக்கிய நபர் கைது
உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா விற்பனை நடப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, தெற்கு உக்கடம், அன்பு நகரை சேர்ந்த அப்பாஸ், 36 என்பவர் உக்கடம், லாரிப்பேட்டை பகுதியில் ஒருவரிடம் இருந்து, கஞ்சா வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அப்பாசை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் விற்பனைக்காக, கஞ்சா வாங்கி வந்து கரும்புக்கடை, சுண்ணாம்பு காளவாய் பகுதியில், பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் அங்கு சென்று, அப்பாஸ் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கஞ்சா யாரிடம் இருந்து வாங்கினார் என்பது தொடர்பாக, அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.