/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொழுதுபோக்க சூப்பரான இடம் செம்மொழி பூங்கா! தினந்தோறும் பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
பொழுதுபோக்க சூப்பரான இடம் செம்மொழி பூங்கா! தினந்தோறும் பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு
பொழுதுபோக்க சூப்பரான இடம் செம்மொழி பூங்கா! தினந்தோறும் பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு
பொழுதுபோக்க சூப்பரான இடம் செம்மொழி பூங்கா! தினந்தோறும் பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 12, 2025 08:55 AM

காந்திபுரம்: கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டது. குடும்பமாகவும், நண்பர்களுடனும் பூங்காவை ஏராளமானோர் பார்வையிட்டனர். பள்ளி குழந்தைகளும் குழுவாக வந்திருந்தனர். சிறந்த பொழுதுபோக்கிடமாக அமைந்திருக்கிறது.
பூங்காவை பார்வையிட்ட பொதுமக்களில் சிலர் கூறியது:
'நன்றாக பராமரிக்கணும்'
பூங்கா நன்றாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து மரக்கன்றுகள் தருவிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. அவை நன்கு வளர்ந்த பின் இன்னும் நன்றாக இருக்குமென எதிர்பார்க்கிறோம். ஊட்டி பூங்காவில் உள்ள பூச்செடிகள் அதிகமாக தென்படுகின்றன. அச்செடிகளை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் ஆறு மாதங்களில் காணாமல் போய் விடும். பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்க வேண்டும். இன்றைய தினம் கழிப்பறை எவ்வாறு சுத்தமாக இருக்கிறதோ, அதே போல் தினமும் பராமரிக்க வேண்டும்.
வேணுகோபால், வடவள்ளி
'பொழுதுபோக்க சிறந்த இடம்'
கடையேழு வள்ளல்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நீர் வீழ்ச்சி நன்றாக இருக்கிறது. பூக்கள் அருமையாக இருக்கின்றன. ஆரோக்கிய வனம் நன்றாக இருக்கிறது. மருத்துவ குணம், மூலிகை செடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. படிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் புத்தகங்கள் வைத்தால் நன்றாக இருக்கும். பொழுதுபோக்குவதற்கு சிறந்த இடமாக இருக்கிறது.
குணசேகரன், தனியார் பள்ளி ஆசிரியர்
'திறந்தவெளி ஜிம் சிறப்பு'
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பூங்கா வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூக்கள் அதிகமாக காணப்படுகின்றன. சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. பெரியவர்களும் விளையாடவதற்கான கட்டமைப்பு அமைக்க வேண்டும். திறந்தவெளி ஜிம் அமைத்திருப்பது சிறப்பு. இருக்ககைகளை மர நிழலில் வைத்தால் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். படிப்பகங்களில் புத்தகங்கள் வைக்க வேண்டும்.
மோனிஷா, சரவணம்பட்டி
'நன்றாக என்ஜாய் பண்ணலாம்'
ரொம்ப சிறப்பாக இருக்கிறது. ரிலாக்ஸ் செய்வதற்கு சிறந்த இடம். மன அமைதி கிடைக்கும். ஒரு மாதத்துக்கான 'பாஸ்' வாங்கி விட்டேன். திருப்தியாக இருக்கிறது. வாக்கிங் செல்லும் போது, இயற்கையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது. குழந்தைகள் சந்தோஷமாக விளையாடுவர். வெளிநாட்டு மரச்செடிகள், அரிய வகை மரக்கன்றுகள், மூலிகை செடிகள் இருக்கின்றன. படிப்பகங்களில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி புத்தகங்கள் வைக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் அமைதியான சூழலில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். நன்றாக என்ஜாய் பண்ணலாம்.
நாராயணசாமி, ரேஸ்கோர்ஸ்
'செம்மொழிக்கு சிறப்பு சேர்க்கணும்'
செம்மொழி பூங்கா என அடையாளப்படுத்த நுழைவாயில் அருகே கடையேழு வள்ளல்கள் சிலைகள் உள்ளன. அதைத்தவிர வேறெதுவும் இல்லை. தாவரவியல் பூங்காக்களை போல் இருக்கிறது. செம்மொழியான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை போற்றும் வகையில் வைக்க வேண்டும். கீழடி அருங்காட்சியகத்தில் உள்ளதை கூட, இதன் ஒரு பகுதியில் காட்சிப்படுத்தலாம்.
ரஞ்சனி, அவிநாசி
'வித்தியாசமாக இருக்கு'
வ.உ.சி., பூங்காவை காட்டிலும் இது வித்தியாசமாக இருக்கிறது. நல்ல அனுபவமாக உள்ளது. மின் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்குமென நினைக்கிறோம். பல்வகையான தோட்டங்கள் இருக்கின்றன; நன்றாக இருக்கிறது. இதை சிறப்பாக பராமரிக்க வேண்டும். குப்பை கொட்டி பாழ்படுத்தி விடக்கூடாது.
மீனா, வடவள்ளி
'சூப்பரா, திருப்தியா இருக்கு'
சூப்பராக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கலர் புல்லாக பார்க்க முடிகிறது. ஏகப்பட்ட ரோஜா செடிகள் இருக்கிறது; பார்க்கவே ரம்மியமாக உள்ளன. எல்லாமே நன்றாக இருக்கின்றன. திருப்தியாக உள்ளது.
-சித்தீஸ்வரி, பாப்பநாயக்கன்பாளையம்

