/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரக்க பறக்க' புறப்படும் துாய்மை பணியாளர்கள்! பணி நேரம் மாறியதால் மனக்குமுறல்
/
'அரக்க பறக்க' புறப்படும் துாய்மை பணியாளர்கள்! பணி நேரம் மாறியதால் மனக்குமுறல்
'அரக்க பறக்க' புறப்படும் துாய்மை பணியாளர்கள்! பணி நேரம் மாறியதால் மனக்குமுறல்
'அரக்க பறக்க' புறப்படும் துாய்மை பணியாளர்கள்! பணி நேரம் மாறியதால் மனக்குமுறல்
ADDED : ஜூலை 04, 2025 10:25 PM
கோவை; கோவையில் குப்பை அள்ளும் பணிக்கு துாய்மை பணியாளர்கள் காலை, 5:30 மணிக்கு வர வேண்டுமென கட்டாயப்படுத்துவதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது சிரமத்தை புரிந்து கொள்ளாமல் நிர்பந்திப்பதால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் உள்ளனர். இதற்கு முன் துாய்மை பணியாளர்களின் வருகை பணி நேரம், அதிகாலை, 5:45 முதல், 6:15 மணி வரை இருந்தது.
துாய்மை பணியாளர்களின் குடியிருப்பு உக்கடம், வெரைட்டி ஹால் ரோடு, காந்திபுரம், பீளமேடு, ஒண்டிபுதுார் ஆகிய இடங்களில் வசித்தனர். அதன் பின், நகருக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, துாய்மை பணியாளர்கள் குடியமர்த்தப்பட்டனர். பலரும் வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கோவைப்புதுார், கீரணத்தம் குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்து நகரப்பகுதிக்கு துாய்மை பணிக்கு வந்து செல்ல தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், கீரணத்தத்தில் இருந்து அதிகாலையில் பணிக்கு வந்த இருவர், வாகனம் மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, பணியாளர்கள் கோரிக்கையை ஏற்று, வருகை நேரத்தை காலை, 7:00 மணிக்கு மாற்றி, முந்தைய கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருந்தார். அதனால், துாய்மை பணியாளர்கள் நிம்மதி அடைந்திருந்தனர். தற்போது குப்பை அள்ளும் பணி வேறொரு தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இச்சூழலில் வருகை பதிவு நேரம் அதிகாலை, 5:30 மணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை போன்ற வெளிமாவட்டங்களில் காலை, 5:30 மணிக்கு துாய்மை பணியாளர் வருகை தருகின்றனர். அதேபோல், கோவையிலும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது' என்றனர்.
பேரிடர் சமயத்தில், உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.