/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை பயிர் காப்பீடு; பயன் பெற அழைப்பு
/
தென்னை பயிர் காப்பீடு; பயன் பெற அழைப்பு
ADDED : ஜன 07, 2025 10:52 PM
பொள்ளாச்சி; ''தென்னை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்,'' என வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா தெரிவித்தார்.
தென்னை பயிர் காப்பீட்டு திட்டம், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்களிப்புடன் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு, இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் வாயிலாக நடப்பாண்டில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக, இயற்கை மற்றும் பேரிடர் நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
தென்னை மரங்கள் திடீரென இறப்பதால் வருவாய் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு, உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
இயற்கை பேரிடரினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளை மறுநடவுக்கு ஊக்குவித்து தென்னை சாகுபடியை லாபகரமானதாக மாற்றுதல் உள்ளிட்டவை நோக்கமாக உள்ளது.
இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய அனைத்து தென்னை மரங்களுக்கும் காப்பீடு செய்யலாம். குறைந்த பட்சம் ஐந்து தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். நான்கு வயது முதல், 60 வயது வரை உள்ள குட்டை மற்றும் கலப்பின ரகம், 7 வயது முதல், 60 வயது வரை நெட்டை ரக மரங்களை காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தின் இயற்கை பேரிடர் அல்லது நோய் பாதிப்புகளினால் ஈடு செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படும் மரங்கள்; காட்டுத்தீ மற்றும் புதர் தீ, மின்னல் உள்ளிட்ட தற்செயலான தீ விபத்துகள், நில நடுக்கம், நிலச்சரிவு, சுனாமி, கடுமையான வறட்சி, அதன் விளைவாக மொத்த இழப்பு போன்ற பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
4 வயது முதல், 15 வயது வரை, காப்பீடு தொகை, 900 ரூபாயாகும். முழு பிரிமியத்தொகை, ஒன்பது ரூபாய் செலுத்தணும். ஓர் ஆண்டுக்கு, 2.25 ரூபாய், இரண்டாண்டுக்கு, 4.16 ரூபாய்; மூன்றாண்டுக்கு, 5.91 ரூபாயாகும்.
16 வயது முதல், 60 வயது வரையுள்ள மரங்களுக்கு, காப்பீட்டு தொகை 1,750 ரூபாயாகும். முழு பிரிமயத்தொகையாக, 14 ரூபாயும்; ஓர் ஆண்டுக்கு, 3.50; இரண்டாண்டுக்கு, 6.48; மூன்றாண்டுக்கு, 9.19 ரூபாய் செலுத்த வேண்டும்.
எந்த தேதியில் பிரிமிய தொகை செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம், 1ம் தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்துக்கு பாலிசி வழங்கப்படும்.பாலிசி தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் ஏற்படும் இழப்பிற்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்படமாட்டாது; மேலும் விவசாயிகள் அதிக பட்சம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே தவணையில் பிரிமியத்தொகை செலுத்தலாம்.
விவசாயிகள், முன்மொழிவு படிவம், ஆதார் நகல், நிலப்பதிவேட்டின் சான்று அதாவது பட்டா மற்றும் சிட்டா, நடப்பு பசலி ஆண்டில் வளர்க்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கையை காட்டும் கிராம நிர்வாக அதிகாரி முறையாக கையொப்பமிட்ட அசல் அடங்கல் ஆவணம், வருவாய் ஆணையத்தால் வழங்கப்பட்ட கள அளவீட்டு புத்தக நகல் ஆகிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.
மேலும், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வதற்கான தற்போதைய நிபந்தனைகள் பற்றி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரின் சான்றிதழ் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் ஆகியவை இணைக்க வேண்டும்.
வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து, பிரிமிய தொகையினை, 'டிடி'யாக, DD in favour of AIC OF INDIA LTD (payable at chennai) என எடுத்து உரிய அடங்கல் மற்றும் நில ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். இத்தகவலை, வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா தெரிவித்தார்.