/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
/
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
ADDED : ஆக 03, 2011 10:55 PM
சூலூர் : சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சூலூரில் நடந்தது.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, அறக்கட்டளை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
பொருளாளர் நடராஜன் வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, சான்றிதழ்களை வழங்கி, சூலூர் எம். எல்.ஏ., தினகரன் பேசுகையில்,''மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியரை மதிக்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்த, தினமும் யோகா, தியானப்பயிற்சி செய்யவேண்டும். வீடுகளில் மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்கவேண்டும்,'' என்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பேசுகையில்,''அரசின் உதவியை எதிர்பார்க்காமல், நன்கொடையாளர்கள் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ''சூலூர் வட்டாரத்தில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கல்வியின் தரமும், தேர்ச்சி சதவீதமும் உயர்ந்துள்ளது.'நீ என்னவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்' என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை மனதில் கொண்டு படிக்கவேண்டும்,'' என்றார். விழாவில், 32 மாணவ, மாணவியருக்கு 70 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கவேலு, கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலுசாமி நன்றி தெரிவித்தார்.

