ADDED : ஜூலை 08, 2025 11:49 PM
தொண்டாமுத்தூர்; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் மகேஸ்வரன், 20. பேரூரில், வாடகை வீட்டில் தங்கி, பேரூர் தமிழ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம்., பி.ஏ., படித்து வந்தார். இவருக்கு சிறு வயதில் வலது கால் சரியாக நடக்க முடியாமல், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து, அடிக்கடி கால் வலி ஏற்பட்டு, மருந்துகள் உட்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, கால் வலி அதிகமாக இருப்பதாக, நண்பர்களிடம் கூறி அழுது வந்துள்ளார். நேற்று காலை, மகேஸ்வரன் கல்லூரிக்கு செல்லாமல், அறையிலேயே தனியாக இருந்துள்ளார்.
மாலையில், வீட்டின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்தபோது, மகேஸ்வரன் அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.