/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாங்க சிலுசிலுன்னு ஒரு 'வனக்குளியல்' போடுவோம்!
/
வாங்க சிலுசிலுன்னு ஒரு 'வனக்குளியல்' போடுவோம்!
ADDED : அக் 11, 2025 11:07 PM

வ னக்குளியல் என்றால் வனப் பகுதியில் உள்ள அருவியிலோ, நீர் நிலைகளிலோ குளிப்பது என்று பொருள் அல்ல.
மாறாக வனக்குளியல் என்பது எந்த மருந்துகளும் இல்லாமல், உடல், மனம் மற்றும் ஆன்மா அடையும் ஆரோக்கிய நிலை.
ஐந்து புலன்களையும் இயற்கையின் சூழலுடன் மூழ்கடித்து, ஆழ்ந்த நம்பிக்கையுடன், தயக்கம் எதுவும் இல்லாமல் செலவழிக்கும் நேரம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த காலம் அல்லது எதிர்காலத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், நீங்கள் காட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் போது, காட்டின் நறுமணம், பறவைகளின் ஒலி, சிற்றருவிகளில் கொட்டும் தண்ணீரின் ஓசை, உங்கள் உடலை வருடிடும் குளிர்ந்த காற்று ஆகியவற்றால் வசீகரிக்கப்பட்டு, உங்களை மறந்து, தயக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது தான் வனக்குளியல் என, புது விளக்கம் தருகிறார் டாக்டர் பூ.சி.ராஜு.
புற்றுநோய் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் பூ.சி.ராஜு, தனது 74ம் வயது வரை நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர்.
இவருக்கு வயது, 85. தற்போது இவர் கோவை ஆனைகட்டி ரோட்டில், ஆரோக்கிய குடும்பம் என்ற ஓய்வு இல்லத்தை நிர்வகித்து வருகிறார்.
இல்லத்தை ஒட்டிய தனக்கு சொந்தமான இடத்தை, வனப்பகுதி போல உருவாக்கி, வனக்குளியலுக்கு உண்மையான அர்த்தத்தை உருவாக்கியுள்ளார்.
வனக்குளியல் என்பது, நம்மை நமது ஐம்புலன்கள் வாயிலாக இயற்கையுடன் இணை க்கும் கலை. நமது உண்மையான வீடு வனாந்தரமே, என்கிறார் டாக்டர் ராஜு.
அவர் கூறியதாவது:
வனக்குளியலில் பங்கேற்பது, இயற்கையின் உடனான நமது உணர்ச்சி பிணைப்பை வலுப்படுத்துகிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ, மரங்கள் ஆக்சிஜனை வழங்குகின்றன. எனவே மரங்களையும், பூமியில் உள்ள பிற வாழ்வினங்களையும் பாதுகாப்பது, ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
மனித நரம்பு மண்டலத்துக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான இயற்கையான இணைப்பு, 'இயற்கை நியூரான்கள்' என்று குறிப்பிடப்படுகிறது.
இதுதான், 'பயோபிலியா' விளைவு என்பதாகும். நீங்கள் மலைவாசஸ்தல சாலையில் வாகனம் ஓட்டும்போது, குளிர்ந்த காற்றுடன் பசுமை கம்பள காட்சி மனதை அள்ளுகிறது.
சில நிமிடங்கள் காரை நிறுத்தி, உங்களை அனைத்து புலன்களாலும், இயற்கையை ரசிக்க கட்டாயப்படுத்துகிறது. இது மனிதர்களின் உள்ளார்ந்த பயோபிலியா. வனக்குளியலால் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் அகற்றப்படுகின்றன. நாம் மண்ணின் நுண்ணுயிரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, நன்மை ஏற்படுகிறது. வனக்குளியலால் உண்டாகும் பயன்களை, வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். இந்த பேரின்பம் விரிவடைய, விரிவடைய நீங்கள் இயற்கையுடன் இணைந்து வாழ விரும்புவீர்கள். இந்த அனுபவத்தை இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
கூறி முடித்தார் டாக்டர் ராஜு.
என்ன சார்... போடுவோமா ஒரு வனக்குளியல்?
வனக்குளியலால் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் அகற்றப்படுகின்றன. நாம் மண்ணின் நுண்ணுயிரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, நன்மை ஏற்படுகிறது. வனக்குளியலால் உண்டாகும் பயன்களை, வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். இந்த பேரின்பம் விரிவடைய, விரிவடைய நீங்கள் இயற்கையுடன் இணைந்து வாழ விரும்புவீர்கள்.