/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்கத்துறை தடுப்பணை கட்டும் பணி துவக்கம்
/
செங்கத்துறை தடுப்பணை கட்டும் பணி துவக்கம்
ADDED : பிப் 02, 2024 10:44 PM

சூலுார்;செங்கத்துறை தடுப்பணையை புனரமைக்க, பூமி பூஜை நேற்று நடந்தது. இதனால், சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட செங்கத்துறை ரோட்டில் எஸ்.எப்., எண் 3ல் செங்கத்துறை தடுப்பணை உள்ளது. இத்தடுப்பணைக்கு, திருச்சி ரோட்டின் தெற்கு பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மூலம் மழை நீர் வரும். தடுப்பணை நிறைந்து, நொய்யல் ஆற்றுக்கு செல்லும். இத்தடுப்பணை நீரால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த, 2019ல் பெய்த கன மழை காரணமாக, தடுப்பணை சேதமடைந்தது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை பெய்தாலும், தடுப்பணையில் தண்ணீர் சேகரமாகாமல், நொய்யல் ஆற்றை நோக்கி செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். முதல்வர், அமைச்சர், கலெக்டர், தாசில்தார் என, பலருக்கும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன.
தற்போதுதான் விடிவு காலம் கிடைத்துள்ளது. தடுப்பணையை புனரமைக்க, 1 கோடியே, 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூமி பூஜை நடந்துள்ளது.
இதுகுறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க சூலுார் நகர தலைவர் முத்துசாமி கூறுகையில், 'ஐந்து ஆண்டுகளாக தடுப்பணை கட்ட வலியுறுத்தி வந்தோம். அதன் பயனாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றார்.

