ADDED : அக் 22, 2025 11:48 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், மூன்று வீடுகளின் மேல் கூரைகள் இடிந்து விழுந்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பள்ளங்களில் கட்டியுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இரவு பகலாக மழை பெய்து வருகிறது. நேற்று, 20ம் தேதி, 3 மி.மீட்டர், 21ம் தேதி, 7 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் மேட்டுப்பாளையம் மணி நகர் தாசனூர் சாலையில் கலாவதியின் ஓட்டு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
தோலம்பாளையம் அண்ணா நகரில் கமலம் என்பவரின் வீடும், மருதூர் ஊராட்சி கோடதாசனூரில் சுப்பம்மாள் ஆகியோரின் ஓட்டு வீடுகளின் மேல் கூரை இடிந்து விழுந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கும், மேட்டுப்பாளையம் வருவாய் துறையின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.