ADDED : செப் 23, 2025 08:27 PM

பொள்ளாச்சி, ;ஆனைமலை மற்றும் வால்பாறை வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வாழ்வாதாரத்துக்கு உதவும் நோக்கில், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உண்ணிச்செடிகளை அகற்றி, பொடி செய்து, எரிகட்டியாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, தொழிற்சாலைகளில் எரியூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக, ஆனைமலை மற்றும் வால்பாறை வனப்பகுதியில் காணப்படும் உண்ணிக்குச்சி செடிகளை, பசுமை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி மற்றும் மகளிர் குழு திட்ட இயக்குனர் மதுரா தலைமையில், ஆனைமலை மற்றும் வால்பாறை வனச்சரகங்களில் வசிக்கும் கே.1503 துாணக்கடவு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை மற்றும் வால்பாறை வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.
பழங்குடியினரின் பல்வேறு கேள்விகளுக்கு, வனத்துறையினர் பதிலளித்தனர். ஒருங்கிணைப்பு கூட்ட நிகழ்ச்சியின் சாராம்சங்கள், உயரதிகாரிகளால் இறுதி செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
