ADDED : ஜன 09, 2024 08:02 PM
உடுமலை:மாவட்டத்தில், கொரோனா தொடர் சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும், நலம் பெற்று வீடு திரும்பினர்.
திருப்பூரைச்சேர்ந்த, 82 வயது முதியவருக்கு, டிச., 19ல் கொரோனா உறுதியானது. டிச., கடைசி வாரம், 54 வயது நபர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்த நிலையில், 82 வயது நபரை குடும்பத்தினர், வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாகக்கூறி அழைத்துச்சென்று விட்டனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த, 54 வயது நபர் குணமடைந்து விட்டார். இதனால், திருப்பூரில் கொரோனா சிகிச்சையில் யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ''தாலுகா அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறிகுறியுடன் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை,'' என்றார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''தொற்று பாதிப்பு திருப்பூர் மாவட்டத்தில் இல்லை. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கினால், கேரளாவில் இருந்து வருவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர். சளி, தொடர் காய்ச்சல், இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,'' என்றார்.

