ADDED : ஜூலை 13, 2026 07:59 AM
கஞ்சா விற்ற மூவர் கைது
கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம், தயிர் இட்டேரி பகுதியில் ஒரு கிலோ, 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மாணிக்கம், 23, பிரிட்டோ,26, ஆகியோரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். துடியலுார் நஞ்சே கவுண்டன்புதுார், பூந்தோட்டம் பார் அருகே, 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தன்ராஜ், 53, என்பவரை, துடியலுார் போலீசார் கைது செய்தனர்.
சிகரெட் பாக்கெட்கள் பறிமுதல்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அருகில், சிகரெட் உட்பட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை உள்ளது. அதை மீறி, துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மளிகை கடையில் சிகரெட் விற்பனை செய்த முருகேசன், 73 என்பவரை, துடியலுார் போலீசார் கைது செய்தனர். கடையிலிருந்து, 87 பாக்கெட் சிகரெட், 2 பண்டல் பீடி, 6 பாக்கெட் மினி சிகரெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடையில் போதை வஸ்துகள்
அன்னுார் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார் நேற்று செந்தாம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். மளிகை கடை உரிமையாளர் சந்திரன், 56, தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் வைத்திருந்தார்.
மேலும், அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 31 மது பாட்டில்களும், அவர் வைத்திருந்த ரொக்கம், 18 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இவர், கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தெரிந்தால், அன் னுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கணவரை கொன்ற மனைவி
அன்னுார் அருகே மூக்கனுாரை சேர்ந்தவர் ரமேஷ், 38. மனைவி சசி பிரியா. ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 10ம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். அன்னுார் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சசி பிரியாவிடம் விசாரித்த போது, அவர் தனது வாக்குமூலத்தில், 'கணவர் ரமேஷ் குடிக்க பணம் கேட்டபோது, இல்லை என கூறியதால், என்னை அடித்துவிட்டார். இதனால் அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி, வாயையும், மூக்கையும் பொத்தி கீழே தள்ளி விட்டேன்' என தெரிவித்துள்ளார். இதில் ரமேஷ் இறந்து விட்டார்.
அன்னுார் இன்ஸ்பெக்டர் (பொ) செல்வன் வழக்குப்பதிவு செய்து, சசி பிரியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
சூலுார் அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 63. பாப்பம்பட்டி பிரிவில் ஓட்டல் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். ஓட்டலில், மேலாளராக பணிபுரிந்து வந்தவர் கேசவன், 27. வரவு, செலவு கணக்கை ராதாகிருஷ்ணன் சரிபார்த்த போது, கேசவன், பல லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கேட்டபோது, ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் படி, சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
