காலி பாட்டில் தருவதில் தகராறு: டாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல்
காலி பாட்டில் தருவதில் தகராறு: டாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல்
UPDATED : செப் 06, 2026 07:19 PM
ADDED : செப் 06, 2026 07:03 PM
வடவள்ளி: வீரகேரளம் டாஸ்மாக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, விற்பனையாளர் சரவணக்குமார் பணியில் இருந்தனர். அப்போது மதியழகன், சேசராஜ் மற்றும் சீரநாயக்கன்பாளையம் சங்கர் ஆகியோர் காலி பாட்டிலை திரும்ப கொடுக்க வந்தனர். முன்பக்கமாக சென்று பாட்டிலை கொடுக்க கூறிய பணியாளரை, சங்கர் பீர்பாட்டிலால் தாக்கினார். அருகிலிருந்தவர்கள் சங்கரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வடவள்ளி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
போன் பேசுவது போல் பறித்து ஓடியவர் கைது
காந்திபுரம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தங்கி பணிபுரிபவர் சேலத்தை சேர்ந்தவர் பிரபாகரன். சேலத்தில் இருந்து தங்கை மகன் தீனாவுடன் காந்திபுரம் வந்தார். பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கிய போது, அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டுக்கு போன் செய்ய போனை கேட்டார். பேசுவது போல் நடித்தவர் திடீரென ஓட்டம் பிடித்தார். ஈரோடு பஸ்சில் ஏற முயன்ற அந்நபரை பிடித்து காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 3 போன், ரூ.1200 கைப்பற்றப்பட்டது. விசாரணையில், திருடியது சிவகங்கையை சேர்ந்த கோவிந்தன் என தெரிந்தது; அவர் கைது செய்யப்பட்டார்.
புகையிலை பொருட்கள் விற்ற மூன்று பேர் மீது வழக்கு பதிவு
துடியலுார்: போலீசார் ரோந்து பணியின் போது, அப்பநாயக்கன்பாளையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்களிடம், 22.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தென்காசியை சேர்ந்த தாமஸ் மற்றும் இளங்கோ ஆகியோரை கைது செய்தனர்.
* சரவணம்பட்டியில், புதுக்கோட்டை கார்த்திக் என்பவரை ரோந்து பணியின் போது கைது செய்து, 85 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
* சரவணம்பட்டி - காளப்பட்டி ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற சின்னவேடம்பட்டி தியாகராஜன் என்பவரை கைது செய்தனர். 1.2 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
